Monday, July 6, 2009

கட்டுண்டு கிடக்கும் காலச்சக்கரம் தன்னியக்கம் பெறுக.


கண்கள் சிவப்பேறிக் கிடக்கின்றன.
அழுகின்றேனா? அனல்கின்றேனா?
விழியோடையில் உலர்ந்த
திரவத்தின் சாட்சியமாக
இமையோரத்தில் பிசுபிசுப்பு.

பிம்பங்களற்ற எழுதுகோல் நட்பின்
கவிதைப் பேச்சும்,
தோழமைக் கடிகளும்
இருண்ட துயருக்குள்…

எழுதும்போதே எண்ணங்கள் தோற்கின்றன
மீளாத் துயரின் வடுக்களாக
ஒளித்தெறிப்புகள் மங்கிக் கலங்குகின்றன.

எல்லையற்ற கற்பனை வெளிகள்
வெறுமைப்பட்டதாய்
ஆங்காங்கே சுமைதாங்கிகளின்
படிமங்களாய்….
உன்னில், என்னில் ஆழப்படிந்து,
உயிர்ப்பின் மூச்சுவரை உட்கார்ந்து விட்டன.



வானம்பாடிகள் ஊமையான
வரலாறு ஒன்று தோற்றம் கொண்டுள்ளது.
பிராணவாயு இல்லாவிடத்தில்
காகித மலர்கள் அழகு செய்கின்றன.

கைகள் குலுக்கிக் கவிதை பேச,
தோளைத் தட்டித் தோழமை உரைக்க
முயன்றும் முடியவில்லை.
நண்பனே!
என் கற்பனைத் தேர்
கல்லாய் கிடக்கிறது.

Monday, February 2, 2009

அடி சகியே!

இன்றென் கனவில் வந்திருந்தாய் நண்பனே.
உன் கவித்தமிழின் திமிர் இன்னும் அடர்த்தியாக,
சிரித்தபடி கதை பேசினாய்.

தூரத்தில் ஷெல் கூவி வரும் ஒலிகேட்டு
குப்புற வீழ்ந்து நிலத்தோடு ஒட்டினேன்
நீயும் அருகிருந்தாய்.

உன் இதழ்க்கடையில் முறுவல்,
ஒரு திருப்தி இழையோடிக் கொண்டது.
கனவுக்குள் கிடந்தபடி காரணத்தைக் கேட்டேன்.

“அடி சகியே!
எப்போதும் நீ எங்கள் அருகிருக்கிறாய்”
என்றுரைத்து என் கனவைக் கலைத்துவிட்டாய்.


Thursday, December 4, 2008

ஊர்கூடித் தேரிழுக்கும் உன்னதத்தால் மலர்ந்த நட்பே!

எண்ணக் கருவெடுத்து
எழுத்தாண்டு கொண்டதனால்
அன்னை தமிழெனக்கு
அருளிய பெருநட்பே!
அகவைகள் படியேறும்
ஆனந்த வேளைகளில்
வாழ்த்தெடுத்துப் பரிமாற
வகையற்றுப் போயுளது.

Tuesday, August 19, 2008

நண்பா!
ஒற்றைச் சொல்லில் உணர்ந்தேன். - உன்
உறவுச் சொல்லிலும் புரிந்தேன்.
நட்பு என்பது எத்தனை அழகு.

Monday, June 9, 2008

நட்பின் வேர்

அலை ஒன்று
நிலை வேறு
களம் ஒன்று
தளம் வேறு


இருப்பினும்.......
நம் நட்பின் வேர் ஒன்றே!

Tuesday, May 13, 2008

கவி நெய்த நட்பு காலம் கரைக்காது.

கவி நெய்த நட்பு காலம் கரைக்காது
புவிமூச்சின் உயிர்ப்புவரை பூவிதழ்கள் கறுக்காது
மொழிகுழைய விழிநனைய நாம்பேசும் காலம்வரை
பார்த்தறியா நம் நட்பு பசுந்தமிழ் கவிதை தரும்.

Friday, April 25, 2008

தமிழுக்குப் பெருமை

ஆணுக்கும், பெண்ணுக்கும்
மேன்மையுறு நட்பென்றால்
நீட்சிபெறும் உலகமும்
நம்மைநோக்கிச் சுட்டட்டும்.
காட்சியுறாக் கண்மணிகள்
கவிநட்பில் ஒன்றித்து
ஆட்சி பெற்றெழுதல்
அணங்கு தமிழுக்குப் பெருமையன்றோ!